5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Thursday, 2 January 2014

மின்வாரிய ஊழியர்களுக்கு 7% ஊதிய உயர்வு

மின்சார வாரிய ஊழியர்களுக்கு ஏழு சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த உயர்வு காரணமாக ஒவ்வொரு தொழிலாளருக்கும் மாதத்துக்கு ரூ.700 முதல் ரூ.13 ஆயிரத்து 160 வரை கூடுதலாக கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மின்சார வாரிய ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக ஊதிய உயர்வினை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை அறிவித்தார். அந்த அறிவிப்பின் விவரம்:
மின்சார வாரியம் உள்பட பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அனைத்துச் சலுகைகளும் காலத்தே அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ஊதிய மாற்றம் மற்றும் வேலைப்பளு ஒப்பந்தம் கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்தச் சூழ்நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தத்தினை ஏற்படுத்தும்
வகையில், ஊதிய மாற்றக் குழுவை அமைக்க உத்தரவிட்டேன். அதன்படி ஊதிய மாற்றக் குழு கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதியன்று அமைக்கப்பட்டது.
இந்தக் குழு 15 தொழிற்சங்கங்களுடன் பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட கருத்து பரிமாற்றங்களைக் கருத்தில் கொண்டும், ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளை கணக்கில் கொண்டும், மின்வாரிய தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது.
ஏழு சதவீதம் உயர்வு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஒவ்வொருவருக்கும் இப்போதைய ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் ஏழு சதவீதம் உயர்வு அளிக்கப்படும். இந்த உயர்வால் ஒவ்வொரு தொழிலாளருக்கும் மாதத்துக்கு குறைந்தபட்சம் ரூ.700-ம், அதிகபட்சம் ரூ.13 ஆயிரத்து 160-ம் ஊதிய உயர்வு கிடைக்கும்.
பத்தாண்டு அல்லது அதற்கு மேல் பணியாற்றியவர்களுக்கு பணிக்கால பயனாக ஒரு ஆண்டு ஊதிய உயர்வு, அதாவது 3 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும். தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலையைப் பொருத்த வரையில், தமிழக அரசு அலுவலர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதிய உயர்வு தமிழக மின்சார வாரிய ஊழியர்களுக்கும் வழங்கப்படும்.
நான்கு ஆண்டுகள் அமல்: காலமுறை ஊதியத்தில், அதிகபட்ச ஊதிய நிலையை எட்டிய போதும், ஆண்டுக்கொரு முறை தேக்க நிலை ஊதிய உயர்வு வழங்கப்படும். இப்போதுள்ள ஊதிய விகிதம் மற்றும் தரஊதியம், படிகள், சிறப்பு ஊதியம் ஆகியன மாற்றமின்றி தொடர்ந்து அளிக்கப்படும்.
இப்போதுள்ள 3 சதவீதம் ஆண்டு ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும். பணியில் சேர்பவர்களுக்கான அதிகபட்ச பயிற்சி காலம் ஓராண்டாக இருக்கும். பயிற்சிக் காலத்தில் தொகுப்பு ஊதியமும், ஓராண்டுக்குக் குறைவாக பயிற்சி காலமுள்ள பதவிகளுக்கு இப்போதுள்ள நிலையே தொடரும். பயிற்சி காலம் முடிந்ததும் காலமுறை ஊதியம் (ஊதியம் மற்றும் தர ஊதியம்) வழங்கப்படும். இது ஒப்பந்தத் தேதியிலிருந்து செயல்பாட்டுக்கு வரும்.
ஊதிய உயர்வு கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும். அந்தத் தேதியிலிருந்து கடந்த 31-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வரையிலான 25 மாதங்களுக்கான ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ரொக்கமாக இரண்டு தவணைகளில் வழங்கப்படும். முதல் தவணை இந்த மாதத்திலும், இரண்டாவது தவணை வரும் ஏப்ரலிலும் அளிக்கப்படும். இந்த ஊதிய மாற்ற ஒப்பந்தம் கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் வரும் 2015 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி வரை நான்கு ஆண்டுகள் அமலில் இருக்கும்.
80 ஆயிரத்து 980 பேர்: இந்த ஊதிய மாற்ற ஒப்பந்தத்தின் மூலம் 70 ஆயிரத்து 820 பணியாளர்கள் மற்றும் 10 ஆயிரத்து 160 அதிகாரிகள் என மொத்தம் 80 ஆயிரத்து 980 பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.
இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.252 கோடி கூடுதல் செலவும், ஊதிய மாற்ற நிலுவைத் தொகை வழங்கும் வகையில் ரூ.525 கோடி செலவும் ஏற்படும். இந்தச் செலவினங்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிதியிலிருந்தே மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்

No comments:

Post a Comment


web stats

web stats