Friday, 18 July 2014

இவரைப் பார்த்தால் கண்ணகி போல தெரிகிறது... மதுரை ஆசிரியைக்கு உயர்நீதிமன்றம் புகழாரம்.

இந்த ஆசிரியையின் போராட்டத்தைப் பார்த்தால் கால் சிலம்பை எடுத்துக் கொண்டு மதுரை மன்னனிடம் நீதி கேட்டுப் போராடிய கண்ணகி போலத் தெரிகிறது என்று மதுரை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த ஆசிரியையின் பெயர் சங்கீதா. இவர் மதுரை பீபி குளத்தைச் சேர்ந்தவர். சிவகங்கை மாவட்டம் புழுதிப்பட்டியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக இருந்து வந்தார். இவர் கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி நடந்த இடமாறுதலுக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொண்டார். அப்போது மதுரை திருப்பாலை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு இவருக்கு இடமாறுதல் கிடைத்தது. ஆனால் அரசு உத்தரவு கொடுக்கவில்லை.
தொடங்கியது போராடடம் இதையடுத்து ஆசிரியை சங்கீதா, மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை சந்தித்து விவரம் கேட்ட போது, சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மூலம் இடமாறுதல் உத்தரவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சங்கீதாவுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடத்தில் 22.8.2012 அன்று கிரிஜா என்பவர் இடமாறுதல் செய்யப்பட்டு நியமிக்கப்பட்டார்.
இதுகுறித்து விவரம் கேட்பதற்காக பலமுறை கல்வி அதிகாரியை சந்தித்துப் பேச முயன்ற போதும், அவரை சந்திக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் சங்கீதா. அதில், தனக்கு திருப்பாலை பள்ளிக்கு இடமாறுதல் உத்தரவு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் சங்கீதாவே நேரில் ஆஜராகி தனக்காக வாதிட்டார்.
இடமாறுதல் கவுன்சிலிங்கில் நடந்த முறைகேடுகள் குறித்து விவரித்ததுடன், இதன்காரணமாக தனது குடும்பம் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்தும் நீதிபதியிடம் கண்ணீர்மல்க முறையிட்டார் சங்கீதா. இதைத்தொடர்ந்து, மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், துணை இயக்குநர் ஆகியோரிடம் இருந்து உரிய விளக்கங்களை பெற்றுத் தெரிவிக்க, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. சங்கீதா, ஆஜரானார். அப்போது கோர்ட்டில் ஆஜரான முதன்மை கல்வி அதிகாரி ஆஞ்சலோ இருதயசாமி, மனுதாரருக்கு திருப்பாலை பள்ளியில் இடமாறுதல் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறி அந்த உத்தரவு நகலை கோர்ட்டில் சமர்ப்பித்தார். இதை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.
அதன்பின்பு, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டு இருந்த காரணத்தினால் மனுதாரர் சங்கீதா நேரில் ஆஜராகி தனது தரப்பு நியாயத்தை எடுத்துக்கூறினார். பல்வேறு பிரச்சினைகளை சந்தித்த காரணத்தினால் அவர் கண்ணீர் விட்டார். இருந்த போதிலும் அவர், மூத்த வக்கீலை போன்று ஆவணங்களை காட்டி தனது தரப்பு நியாயத்தை சுட்டிக்காட்டினார். ஆசிரியை சங்கீதாவின் வாதம், கண்ணகி கால் சிலம்பை காட்டி மதுரையில் நீதி கேட்டது போல் இருந்தது.
தற்போது உள்ள சூழ்நிலையில் மனுதாரரின் கோரிக்கை அதிகாரிகளால் ஏற்கப்பட்டுள்ளது. இனிமேல் இதுபோன்ற விஷயங்களில் அதிகாரிகள் அநீதி இழைக்கமாட்டார்கள் என்று இந்த நீதிமன்றம் நம்புகிறது என்றார் நீதிபதி.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats