Monday, 13 January 2014

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற தலைமை ஆசிரியர்கள் உழைக்க வேண்டும் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற தலைமை ஆசிரியர்கள் உழைக்க வேண்டும் என்று அமைச்சர் கே.சி. வீரமணி பேசினார். வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் சேர்ந்த வேலூர் மண்டல கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் காட்பாடி சன்பீம் மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் வரவேற்றார். பள்ளி பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 18 அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பரிசு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த...
வேலூர் மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் பொதுத் தேர்வுகளில் 70 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள் 660 பேர் வரவழைக்கப்பட்டு ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
உங்களுக்கு கஷ்டத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக வரவழைக்கவில்லை. 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள் பரிசு பெற்று சென்றது போல நீங்களும் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக வரவழைக்கப் பட்டுள்ளீர்கள்.
660 பள்ளி தலைமை ஆசிரியர்கள் என்பது அதிகமான எண்ணிக்கைதான். அடுத்த ஆண்டு இந்தநிலை இருக்க கூடாது.
ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலும், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பள்ளிக் கல்வித்துறைக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.45 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த அளவு நிதியை எந்த முதல்–அமைச்சரும் ஒதுக்கீடு செய்யவில்லை.
10 ஆயிரம் ஆசிரியர்கள்
ஆட்சி பொறுப்பேற்கும் போது ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் 50 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் மேலும், 10 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வாணையம் மூலம் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2
பொதுத்தேர்வுக்கு தேர்ச்சி விகிதம் 95 சதவீதமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் 70 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் இங்கு கருத்தாளர்கள் சொன்ன கருத்தினை செயல்படுத்தி 100 சதவீதம் தேர்ச்சி பெற உழைக்க வேண்டும். உங்களால் நினைத்தால் முடியாதது இல்லை. கண்டிப்பாக வெற்றி பெற முடியும். ஆசிரியர் பணி கடினமானது. உங்களுக்கு நிறைவான சம்பளத்தை அரசு தருகிறது. வளர்ச்சி மிகுந்த தமிழகத்தை உருவாக்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும். இவ்வாறு அமைச்சர் வீரமணி பேசினார்.
முதன்மை செயலாளர்
பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா பேசியபோது கூறியதாவது:–
பள்ளி கல்வித்துறையில் ஆய்வுக்கூட்டம் கோவை மண்டலத்தில் தொடங்கி 6–வது கூட்டமாக வேலூர் மண்டலக் கூட்டம் நடைபெறுகிறது. வருகிற மார்ச் மாதம் 1–ந்தேதி பிளஸ்–2 பொதுத்தேர்வும், 27–ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வும் தொடங்குகிறது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 11.6 லட்சம் மாணவ, மாணவிகளும், பிளஸ் 2 பொதுத்தேர்வை 8.8 லட்சம் பேரும் எழுதுகின்றனர். பொதுத்தேர்வில் நல்ல தேர்ச்சி சதவீதத்தை பெற வேண்டும்.
மாணவர்களுக்கு வினா–விடை கையேடு வழங்குவது போல ஆசிரியர்களுக்கும் குறிப்பு கையேடுகள் வழங்கப்படுகிறது. இதை வைத்து 2 மாதத்தில் அனைத்து மாணவர்களும் 100–க்கு 100 சதவீத தேர்ச்சி பெற தலைமை ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் –2 பொதுதேர்வுகளில் ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு 95 சதவீதம் தேர்ச்சி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் 100 சதவீதம் எடுப்பீர்கள் என நம்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
கலெக்டர்
கூட்டத்தில் வேலூர் மாவட்ட கலெக்டர் நந்தகோபால் பேசுகையில், மாணவ சமுதாயம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக முதல் அமைச்சர் ஜெயலலிதா சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும். இருக்கின்ற 2 மாதத்தில் சரியான முறையில் உழைத்து அனைவரும் 100–க்கு 100 தேர்ச்சி பெற பாடுபட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்னி, தமிழ்நாடு பாடநூல் கழக இயக்குனர் சி.என். மகேஸ்வரன் ஆகியோர் பேசினர்.
பாராட்டு
மாதனூர் ஒன்றியம் சின்ன பள்ளிக்குப்பம் பள்ளியின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தி 100 சதவீதம் தேர்ச்சி பெற வைத்த உதவி தலைமை ஆசிரியர் ஜெயவேலை பாராட்டி அமைச்சர் வீரமணி பரிசு வழங்கினார்.
கூட்டத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்குனர் சங்கர், இணை இயக்குனர்கள் கருப்புசாமி, முத்து பழனிச்சாமி, தர்மராஜேந்திரன், கார்மேகம், குப்புசாமி, லதா, செல்வராஜ், வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுப்பிரமணி, மாவட்ட கல்வி அலுவலர் மனோகரன், சன்பீம் பள்ளி தலைவர் அரி கோபாலன், தாளாளர் தங்க பிரகாஷ்அரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் தொடக்கக்கல்வி இயக்குனர் இளங்கோவன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats