குரூப் 4 தேர்வு நடந்து, நான்கு மாதங்கள் ஆன நிலையில்தேர்வு முடிவு தாமதம் - தேர்வர்கள் தவிப்பு

குரூப்
4 தேர்வு நடந்து, நான்கு மாதங்கள் ஆன நிலையில், இன்னும், தேர்வு முடிவை
வெளியிடாமல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி., )
மவுனம் காத்து வருகிறது. இதனால், தேர்வெழுதிய, 12 லட்சம் பேர் தவித்து
வருகின்றனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில், இளநிலை உதவியாளர்,
தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில், காலியாக உள்ள, 5,566 இடங்களை
நிரப்ப, ஆகஸ்ட், 25ல், குரூப் 4, போட்டித்தேர்வை, டி.என்.பி.எஸ்.சி.,
நடத்தியது. பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி நிலையில் நடந்த தேர்வு என்பதால்,
போட்டி போட்டு ஏராளமானோர் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர் எண்ணிக்கை, 17
லட்சமாக உயர்ந்தது. எனினும், ஒரே தேர்வர், பல முறை விண்ணப்பித்தது,
விண்ணப்பங்களை தவறாக பூர்த்தி செய்தது போன்ற காரணங்களால், மூன்று லட்சம்
விண்ணப்பங்களை, டி.என்.பி.எஸ்.சி., நிராகரித்தது. இறுதியில், 14 லட்சம்
பேர், தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தேர்வு நாளன்று, இரண்டு லட்சம்
பேர், வரவில்லை. இதனால், 12.21 லட்சம் பேர், தேர்வு எழுதினர்.
தேர்வு நடந்து, நான்கு மாதம் முடியப் போகிறது. தேர்வு முடிவை, ஒரு மாதமாக,
தேர்வர், ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், தேர்வு முடிவை
வெளியிடுவது குறித்து, எவ்வித அறிவிப்பையும் வெளியிடாமல், தேர்வாணையம்,
மவுனம் காத்து வருகிறது.
சமீபத்தில், தேர்வாணைய தலைவர்,
நவநீதகிருஷ்ணன், நிருபர்களை சந்தித்த போது, "குரூப் 4 விடைத்தாள் மதிப்பீடு
செய்யும் பணி நடந்து வருகிறது; விரைவில், முடிவு வெளியிடப்படும்' என,
தெரிவித்தார்.
ஆனாலும், தேர்வு முடிவு எப்போது, வெளியாகும் என, தெரியாத நிலை உள்ளது.
இது குறித்து, தேர்வாணைய வட்டாரங்கள் கூறியதாவது: விடைத்தாள் மதிப்பீடு
செய்யும் பணி, தனியார் ஏஜன்சி மூலம் நடக்கிறது. ஒரு நாளைக்கு, ஒரு லட்சம்
விடைத்தாள்களை, "ஸ்கேன்' செய்யும் வசதி, சம்பந்தபட்ட, ஏஜன்சிக்கு
இருக்கிறது. எனவே, 12 லட்சம் விடைத்தாள்களாக இருந்தாலும், 15 நாட்களுக்குள்
முடித்துவிட முடியும். விடைத்தாள், "ஸ்கேன்' செய்யும்போதே, தேர்வர் பெற்ற
மதிப்பெண் விவரம் பதிவாகி விடுகிறது. "ஸ்கேன்' செய்யும் பணி முடிந்ததும்,
அதன்பின், இறுதிக்கட்ட வேலை நடக்க வேண்டும். மொத்தத்தில், குறைந்தபட்சம்
இரு மாதத்திற்குள்ளும், அதிகபட்சமாக, மூன்று மாதங்களுக்குள்ளும், தேர்வு
முடிவை வெளியிட முடியும். ஆனாலும், இன்னும், தேர்வு முடிவு வெளியாகாமல்
இருப்பது ஏன் என, எங்களுக்கே புரியவில்லை. தேர்வாணைய தலைவர், "அனைத்துப்
பணிகளையும், விரைந்து முடிக்க வேண்டும்'என, நினைக்கிறார். ஆனாலும், பணிகள்
விரைவாக முடியாததற்கு, முட்டுக்கட்டையாக இருப்பது யார் என்பது,
தேர்வாணையத்திற்குத் தான்
தெரியும்.இவ்வாறு, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணியே முடியவில்லை என்றும்
கூறப்படுகிறது. தேர்வு முடிவை வெளியிடுவதிலேயே, இவ்வளவு கால தாமதம் ஆனால்,
முடிவை வெளியிட்டதற்குப் பின், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த வேண்டும்.
அதற்கு, எவ்வளவு காலமாகும் என்பதும் தெரியவில்லை; இதனால், விரைவில், அரசுப்
பணியில் சேரலாம் என, எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தேர்வர், தவித்து
வருகின்றனர்.
No comments:
Post a comment